கனவுகளை களப்பலியிடு!
உண்மையை வெற்றிகொள்!
என்றேன் நான்.
அதனால்தான்
நித்தமும் உறங்குகிறேன்.
கனவுகளை நான்
சேமிக்க வேண்டும்
என்றான் அந்த இளைஞன்.
சிரித்தேன் நான்.
உறக்கநிலை கனவுகள்
உள்ளச் சிறைக்கு வாராது.
விழிநிலைக் கனவுகள்
வீணாய் என்றும் போகாது.
புதிராய் என்னைப் பார்த்தான்.
புன்னகைத்து சொன்னேன்
விழிநிலைக் கனவுகள்
வீரியம் மிக்கவை
ஆயின் அந்த
இயல்நிலைக் கனவுகள்
இரும்பாய் இறுக வேண்டும்
கனவுகளைப் பற்றி சொல்லேன்
என்றான்.
ஆயிரம் சொல்வேன் நான்
அதற்கே என்
அன்னைத் தமிழை
அழகுற பயிலவேண்டும்
என்ற என் கனவின்
ஒரு முயற்சிதான்
இந்த அம்பும்.
மீண்டும் புதிராய் பார்த்தான்.
சரி சொல்கிறேன் கேள்
(ஒன்றை) அடைந்தவன் கனவு
அவசியமற்றது
அதனால் பயனேதுமில்லை
(ஒன்றை) அடைய முடியாதவன் கனவு
அர்த்தமற்றது
அதனாலும் பயனேதுமில்லை
ஆயின்
அடையமுடிபவன் கனவு
அழகானது
அம்பு போன்றது
அதை மேலும் மேலும் செதுக்கி
இலக்கு நோக்கி
இயலும் வரை செலுத்து
தவறி அது வீழ்ந்தாலும்- நல்ல
தளமாய் அமையும்
நலமாய் உன்னை உயர்த்தி
வளமாய் மாற்றும்
வெற்றிக்கனியை
வெகுவிரைவில்
பெற்றுத்தரும்.
புதிராய் பார்த்தவன்
புதிதாய் மலர்ந்தான்.
இனி கண்கள் திறந்தே
கனவுகள் காண்பேன்.
நிஜங்களை நோக்கி
நித்தம் ஒரு
முயற்சி மேற்கொள்வேன்
என்றான்.
நிஜமாய் ஒரு நன்மை
நிறைவாய் நான் செய்தேனா?
சொல்லுங்கள் நண்பர்களே!
